மக்களே உஷார்! அடுத்த ஷாக் காத்திருக்கிறது. காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை விரைவில் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாமக்கல்லில் கடந்த மே 11ஆம் தேதி நடைபெற்ற மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மே 15 முதல் டீசல் விலை உயர்ந்துள்ளதால், லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, லாரி வாடகைக் கட்டணத்தை தற்போதைய கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் உயர்த்த தீர்மானிக்கப்பட்டது. மேலும், ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும் எனவும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதன் விளைவாக, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று (ஜூன் 15) முதல் லாரி வாடகைக் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பல்வேறு சரக்குகளின் போக்குவரத்து செலவையும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வாடகை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், இதன் தாக்கம் விரைவில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலையில் எதிரொலிக்கும். இதனால் நுகர்வோர் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் என அஞ்சப்படுகிறது.