திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வசிக்கும் வடமாநில தொழிலாளியின் 3 வயது மகள் காணாமல் போன நிலையில், முட்புதரில் காயங்களுடன் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ஆரம்பத்தில், ஒரு வடமாநில இளைஞர் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே, குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், இதில் 4 பேர் ஈடுபட்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியது. இதனால் சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகளை எந்த ஒரு ஊடகத்திலும் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் பின்னணி என்னவென்றால், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களது குடியிருப்பில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, சிறுமி இயற்கை உபாதை கழிக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட குழந்தைக்கு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
பொதுமக்கள் மத்தியில் பரவிய கூட்டு பாலியல் வன்கொடுமை வதந்திகளுக்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி என்ற 19 வயது இளைஞர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்தான் குழந்தையிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.