செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். தனக்கு விவாகரத்து மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது. இந்த வழக்கு முன்னர் பிப்ரவரி 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, அன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, ஜூன் 15ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இன்றைய விசாரணையின்போது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளிப்பார்களா என்ற ஆர்வம் எழுந்துள்ளது. இருப்பினும், விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து வருவதால், அவரது பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பணிகளைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கீதா தனது மனுவில், 1998ல் பதிவுத் திருமணம் மற்றும் 1999ல் சென்னையில் நடைபெற்ற திருமணத்தை குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திருமண வாழ்வின் ஆரம்பம் அமைதியாக இருந்ததாகவும், ஆனால் 2021 முதல் தனது கணவர் நடிகை ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பலமுறை சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனியாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சங்கீதா தனது மனுவில் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனது கணவரின் தவறான உறவுகள் குறித்த சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் வெளியானது தனக்கும் குழந்தைகளுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியதாக சங்கீதா குறிப்பிட்டுள்ளார். எனவே, தனது திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் வசிக்கும் உரிமை அல்லது மாற்று வசதி மற்றும் நிரந்தர பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.