சென்னையில் இன்று மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கிச் சென்ற மெட்ரோ ரயில், திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்றபோது, வழக்கம்போல் கதவுகள் திறக்கப்படவில்லை.
சுமார் 15 நிமிடங்கள் மெட்ரோ ரயிலின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்ததால், ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகளும், அடுத்த கட்டம் செல்லவிருந்த பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவமறிந்து உடனடியாக விரைந்து வந்த மெட்ரோ ரயில்வே ஊழியர்கள், பழுதான கதவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர், கதவுகள் திறக்கப்பட்டன. இதன் பின்னர் பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.
சுமார் 30 நிமிடங்கள் தாமதத்திற்குப் பிறகு, மெட்ரோ ரயில் மீண்டும் மீனம்பாக்கம் நோக்கிப் புறப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் சென்னை மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதம், பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.