சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படத்தை எந்த அரசியல் கட்சியும், அமைப்பும் பயன்படுத்தக் கூடாது என்று ரஜினி நற்பணி மன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குவதை ஒட்டி, ரஜினி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இது ரஜினிகாந்தின் ஆசியுடன்தான் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறார் என்ற செய்திகளைப் பரப்பியது.
இந்தச் சூழலில், அகில இந்திய ரஜினி ரசிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'நமது அன்பு தலைவர் திரு. ரஜினிகாந்த் அவர்களின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்தக் கூடாது. இது தலைவரின் உத்தரவு. ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஜினிகாந்த் நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதைத் தெளிவாக அறிவித்து, தனது 'ரஜினி மக்கள் மன்றத்தை' மீண்டும் 'ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக' மாற்றியிருந்தார். ஆனாலும், தேர்தல் காலங்களிலும் அரசியல் நிகழ்வுகளின் போதும், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்களின் போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தன.
இந்த முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கிலும், ரசிகர்களிடையே தேவையற்ற அரசியல் குழப்பங்களைத் தவிர்க்கும் வகையிலும், 'தலைவர் ரஜினிகாந்தின் நேரடி உத்தரவின் பேரில்' இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரசிகர் மன்றத் தலைமை விளக்கம் அளித்துள்ளது.