தாம்பரம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில், தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலைக்கு இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பெயரைச் சூட்டுவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேயர் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சுமார் 300-க்கும் மேற்பட்ட நிர்வாக மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் விவாதிக்கப்பட்டன.
வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் தனது உயிரை தியாகம் செய்தார். அவரது வீரதீர செயலைப் பாராட்டி, இந்திய அரசின் உயரிய விருதான 'அசோக சக்ரா' விருது அவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் கிழக்கு தாம்பரம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரை செல்லும் சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று நகராட்சி நிர்வாக இயக்குனர் கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023-இன் பிரிவு 186-ன் கீழ், பெயர் மாற்றத்திற்கு அனுமதி கோரி மாநகராட்சி சார்பில் முதன்மை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் இந்த முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வீரத் தியாகி மேஜர் வரதராஜனின் நினைவைப் போற்றும் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.