தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைகளில் கயிறு கட்டி பள்ளிக்கு வரக்கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக தடை விதித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 'சின்ன கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டிப் போட்டுவிட்டுத்தான் வருகிறேன். இங்கு எதற்கும் இடம் கிடையாது. சமூக நீதி ஒன்றிக்குத்தான் இடம். இங்கு ஒரே ஒரு விஷயத்திற்கு தான் வாய்ப்பு, அறிவியல்' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் முதற்கட்டமாக ஐயாயிரம் பள்ளிகளில் ஏஐ, பைத்தான் போன்ற கோடிங் பயிற்சிகளை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அதன் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் நல்ல நிலையில் இருந்தாலும், அதை மேலும் அதிகரிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி வளாகங்களுக்குள் மத, ஜாதி அடையாளங்களுடன் யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பிரிவினையையும் வேற்றுமையையும் வளர்க்கும் எதற்கும் பள்ளிகளில் இடமில்லை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டார். ஒற்றுமையை வளர்க்கும் எதற்கும் வரவேற்பு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த தலைமுறை, போன தலைமுறையை விட கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே இலக்கு என்றும், மற்ற மாநிலங்களை விட தமிழகம் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளித்தாலும், மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே குறிக்கோள் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். பள்ளியும் கல்லூரியும் மிக முக்கியமான இடங்கள் என்றும், போதையின் பாதைக்கு மாணவர்கள் சென்றுவிடாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.