சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற தவெக பிரமுகர், 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, அவர்களின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. வறுமையில் வாடும் பெண்களை குறிவைத்து, ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை சம்மதிக்க வைத்து வீடியோ எடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தனது நண்பர்களுக்கும் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மணிகண்டன், பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனையுடன் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் மணிகண்டனை அழைத்து அவரது செல்போனில் இருந்த வீடியோக்களை அழித்துவிட்டதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மணிகண்டன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புகார் மனு விசாரணைக்காக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
சேலத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம், பொள்ளாச்சி சம்பவத்தை நினைவுபடுத்துவதாக பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.