சென்னையில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 11ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தியாகராய நகர், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பயின்ற சர்வேஷ் என்ற மாணவன், பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தான். உடனடியாக அவனுக்கு முதலுதவி அளித்து இருந்தால் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என மாணவனின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் இதுகுறித்து முறையாக பதில் அளிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உயிரிழந்த மாணவனின் பாட்டி கூறுகையில், 'ராஜாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்திருப்பதாக பள்ளி நிர்வாகம் போன் செய்து கூறியது. அங்கு சென்று பார்த்தபோது அவனுக்கு உயிர் இல்லை. காலையில் விளையாடச் சென்றவன், மைதானத்தில் 10 நிமிடம் மயங்கி விழுந்து கிடந்திருக்கிறான். யாரும் கண்டுகொள்ளவில்லை. எங்களிடம் சொல்லியிருந்தால் நாங்கள் எங்காவது கொண்டுபோய் காப்பாற்றியிருப்போம். பெற்றோருக்கு என்ன நடந்தது என்றே முறையாக சொல்லவில்லை' என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனின் திடீர் மரணம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
விளையாட்டின் போது மாணவன் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக உரிய மருத்துவ உதவி கிடைத்திருந்தால் அவனது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்ற கருத்து வலுத்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.