டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார். இக்கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குத் தேவையான பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார். குறிப்பாக, இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, மருத்துவக் கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மீனவர் நலன் எனப் பல முக்கிய அம்சங்கள் குறித்து அவர் பேசினார்.
முதல்வர் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, ஆண்டுதோறும் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகள் மற்றும் தொழில்துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளை வழங்கும் “இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கத்தை” செயல்படுத்துவதாகும். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் திறன் மையங்களை அமைப்பதற்கும், செயற்கை நுண்ணறிவு, ஆழ்தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, மேகக் கணினி தொழில்நுட்பம், மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி தொடர்புடைய துறைகளில் பயிற்சி அளிப்பதற்கும் மத்திய அரசின் ஆதரவைக் கோரினார்.
NEET தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதற்கான காரணங்களை முதல்வர் விளக்கினார். கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறிய அவர், மருத்துவம் மற்றும் AYUSH படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நிரப்ப அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், “வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்” மற்றும் அனைவருக்கும் வீடு என்ற கனவை நிறைவேற்ற மத்திய அரசின் நிதி உதவியையும், கோயம்புத்தூரில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதிக்குமாறும் வலியுறுத்தினார். இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.
கடற்கரை நகரங்களில் வெள்ளத்தடுப்பு கட்டமைப்புகள், பேரிடர் மேலாண்மை, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய உட்கட்டமைப்புகளை உள்ளடக்கிய “காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம் 2045” மற்றும் குலசேகரபட்டினத்தில் விண்வெளி உற்பத்தி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். ஜி.எஸ்.டி. சாலை, திருச்சி-கரூர், கரூர்-கோயம்புத்தூர் நெடுஞ்சாலைகளை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல், மாதவரம்-சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம், சென்னை-கன்னியாகுமரி அதிவேக ரயில் வழித்தடம் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் ஒப்புதல் கோரினார். ஒகேனக்கல் மூன்றாம் கட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ.2,283.40 கோடி மத்திய நிதி உதவியையும், ‘ஒருங்கிணைந்த கல்வி’ திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு விளங்கும் திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.