திருப்பூரில், சாலைப் பணிகளுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க ஒப்பந்ததாரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், 'அரசு வேலையும் போச்சு… மானமும் போச்சு' என அவர் புலம்புவதாகக் கூறப்படுகிறது.
திருப்பூர் மாநகராட்சியில் சாலைப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் முருகனிடம், நிலுவையில் உள்ள பில் தொகையை விடுவிக்க 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில், முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் உடனடியாகத் தர வேண்டும் என பொறியாளர் சுப்பிரமணியன் வற்புறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் முருகன், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவப்பட்ட பணத்தை கணபதிபாளையத்தில் வைத்து சுப்பிரமணியனிடம் முருகன் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கைதான பொறியாளர் சுப்பிரமணியனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த லஞ்ச விவகாரத்தில் மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகளுக்கான தொகையை வழங்க அரசு ஊழியரே லஞ்சம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான பொறியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.