தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா இல்லையா என்பது குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, ரோஹித் மற்றும் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். அதன்பின்னர், கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் அவர்கள் விலகினர். தற்போது, இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் இவர்களது அதிரடி ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.
இது குறித்து அஸ்வின் கூறுகையில், 'அணி நிர்வாகம் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு இந்த இரு மூத்த வீரர்களையும் பயன்படுத்த விரும்பினால், அவர்களது அனுபவத்தை மிகச் சரியாகப் பயன்படுத்த முடியும். ஆனால், நிர்வாகத்தின் எண்ணம் வேறு திசையில் இருந்தால், வீரர்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். முறையான உடற்பயிற்சி மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் மூலம் இவர்களது உடற்தகுதியை எளிதாகப் பராமரிக்க முடியும். இறுதி முடிவு அணி நிர்வாகத்தின் கைகளில் தான் உள்ளது' என்றார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் ரோஹித் மற்றும் கோலி தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். விராட் கோலி 9 இன்னிங்ஸ்களில் 616 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். மேலும் அவர் தொடர் நாயகன் விருதையும் வென்றார். ரோஹித் சர்மா 409 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 1 சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். இவரும் தொடர் நாயகன் விருதை வென்றார். தங்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் தங்களை நிரூபித்துள்ள இந்த மூத்த வீரர்களை 2027 உலகக் கோப்பைக்கு அழைத்துச் செல்வதா அல்லது முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியை தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்புவதா என்பதை பிசிசிஐ-யும், அணி நிர்வாகமும் தான் முடிவு செய்ய வேண்டும்.
