ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலிக்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாதது சரியான முடிவே என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான ருதுராஜ், மிடில் ஆர்டரில் வாய்ப்பு இருந்தால் மட்டுமே அணியில் இடம்பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 13 அன்று தர்மசாலாவில் தொடங்குகிறது. தசைப்பிடிப்பு காரணமாக விராட் கோலி விலகியதால், அவருக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இருந்தாலும், விளையாடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது என்றும், அவர் நடுவரிசை வீரராகவே பரிசீலிக்கப்படுகிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு, முதல் போட்டியில் நான்காவது இடத்தில் களமிறங்கி சதமடித்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ருதுராஜ் ஆகிய இருவரில் யாருக்குமே விளையாடும் லெவனில் இடம் கிடைக்கப் போவதில்லை என்று சோப்ரா கூறினார். ரோஹித் சர்மா முழு உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் மட்டுமே யஷஸ்வி தொடக்க வீரராக விளையாட வாய்ப்புள்ளது. மற்றபடி மிடில் ஆர்டரில் இடமில்லை. ருதுராஜுக்கும் ஒரு கட்டத்தில் வாய்ப்பு வரும், ஆனால் அவர் மிடில் ஆர்டர் இடத்திற்காவே சோதிக்கப்படுகிறார். அந்த இடத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது அவர் சதமடித்திருந்தார். எனவே, அந்த இடத்தில் வெற்றிடம் ஏற்படும்போதுதான் அவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை எட்டு ஒருநாள் இன்னிங்ஸ்களில் 28.50 சராசரியுடன் 228 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஜூன் 9 அன்று தம்புலாவில் இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணிக்காக நான்காவது இடத்தில் களமிறங்கிய அவர், 114 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். விராட் கோலிக்கு மாற்றாக ருதுராஜை விட யஷஸ்வி ஜெய்ஸ்வாலைத் தேர்வு செய்தது சரியான முடிவு என்று சோப்ரா கூறினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணியின் அங்கமாக இருப்பதால், அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் விளையாடினார். எனவே, சண்டிகரிலிருந்து தர்மசாலாவுக்கு அவர் செல்வது எளிது என்பதால், அவரைத் தொடரச் செய்வதே அர்த்தமுள்ளதாக இருந்தது. இசான் கிஷன் மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டியிருப்பதால், இவருக்கும் விளையாடும் லெவனில் இடமில்லை என்றும் அவர் கூறினார். தேசிய அணியின் பெஞ்சில் அமர்ந்திருப்பதை விட, இந்திய ஏ அணிக்காக விளையாடுவது கெய்க்வாட்டுக்கு அதிகப் பயன் தரும் என்று முன்னாள் இந்திய வீரர் குறிப்பிட்டார். ருதுராஜுக்கு விளையாடும் வாய்ப்பு எங்கு இருக்கிறதோ, அங்கே அவர் தொடர்ந்து விளையாடட்டும். சும்மா அமர்ந்திருப்பதை விட, விளையாடும் வாய்ப்பு கிடைப்பது சிறந்தது என்று சோப்ரா தெரிவித்தார். வைபவ் சூர்யவன்ஷியும் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை என்றும், அவர் இந்திய ஏ அணியின் முத்தரப்பு தொடரில் விளையாடி வருவதாகவும் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டினார்.