இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, காலில் ஏற்பட்ட புதிய காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐபிஎல் 2026 தொடரின் போது முதுகு வலியால் அவதிப்பட்ட ஹர்திக் பாண்டியா, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ தேசிய பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்திய உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட முதலில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அனுமதி வழங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவரது காலின் தசைப்பகுதியில் திடீரென புதிய பிடிப்பு ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில், இந்த காயத்திலிருந்து குணமடைய குறைந்தது 3 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாட வாய்ப்பில்லை என கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது காலில் அதிக பளு விழும் கடுமையான பயிற்சிகளை தற்போது செய்ய வேண்டாம் என மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, அவர் இந்திய அணியுடன் தர்மசாலா செல்லாமல், பெங்களூரு மையத்திலேயே தங்கி உடற்பயிற்சி நிபுணர்களின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை பெற உள்ளார். இந்த எதிர்பாராத பின்னடைவு குறித்து இந்திய அணி நிர்வாகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு இந்திய அணி வென்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் தான் ஹர்திக் பாண்டியா கடைசியாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 3 ஒருநாள் தொடர்களை அவர் ஏற்கனவே தவறவிட்டுள்ளார். நியூசிலாந்து தொடரின் போது அவரால் தொடர்ந்து 10 ஓவர்கள் வீச முடியாது என மருத்துவ குழு தெரிவித்ததால் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. தற்போது உடல் தகுதி பெற்று திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் காயத்தில் சிக்கியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் ஜூன் 13ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி ஜூன் 17ஆம் தேதி லக்னோவிலும், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூன் 20ஆம் தேதி சென்னையிலும் நடைபெற உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு பாண்டியா இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
