அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர், இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார்.
பெஞ்சமின், 2016 சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்த நிலையில், அவர் திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் பண்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. இந்த குணம்தான் என்னை திமுகவில் இணையச் செய்தது. அதிமுகவில் நான் எப்படி உண்மையாகவும், விசுவாசமாகவும் பணியாற்றினேனோ, அதேபோல் இனி திமுகவிற்கும் உழைப்பேன்' என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'அம்மா (ஜெயலலிதா) மறைவுக்குப் பிறகு, அடுத்த தலைமையை ஏற்று நான் நன்றாகத்தான் பணியாற்றினேன். ஆனால், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தொடர்ச்சியாக மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற எனது நல்ல நோக்கம் காரணமாக திமுகவில் இணைந்துள்ளேன். அதிகார மையத்தை நோக்கி நான் சென்றிருக்கலாம். ஆனால், திமுக தலைவரும், இளைஞர் அணி தலைவரும் தொண்டர்களை வழிநடத்தும் விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அதனால்தான் திமுகவில் இணைந்துள்ளேன்' என்று குறிப்பிட்டார்.