கூட்டணியில் மரியாதையும் அங்கீகாரமும் அவசியம் என்றும், காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது கூட்டணியை பலவீனப்படுத்தும் என்ற விசிக தலைவர் திருமாவளவனின் கருத்துக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், "கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியை பலவீனப்படுத்தும் செயல்? ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் தங்களது அமைப்பையும் வாக்கு வங்கியையும் வளர்த்துக்கொள்ளும் உரிமை உள்ளது. காங்கிரஸ் வலுவாக இருந்தால்தான் INDIA கூட்டணி வலுவாக இருக்கும். அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பிற கூட்டணி கட்சிகள் வலுவாக இருப்பதும் கூட்டணிக்கே பலம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "கூட்டணியின் நோக்கம் ஒரு கட்சியின் வளர்ச்சியை மற்றொரு கட்சி தடுக்க வேண்டும் என்பதல்ல. அனைவரும் தங்கள் அரசியல் அடித்தளத்தை விரிவுபடுத்தி, பொதுவான இலக்குகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதுதான். தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனது அடையாளத்தையும் அமைப்பையும் வலுப்படுத்த முயற்சிப்பதை கூட்டணி எதிர்ப்பாக சித்தரிப்பது சரியல்ல. காங்கிரஸை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் INDIA கூட்டணியை வலுப்படுத்தாது. மாறாக பாஜகவுக்கு மட்டுமே உதவும்" என்றும் தெரிவித்துள்ளார்.
"கூட்டணிக்குள் இருக்கும் தோழமைக் கட்சித் தலைவர்கள்கூட காங்கிரஸை வெளிப்படையாக விமர்சிக்க முடிகிறது. அதனால்தான் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மதவாத மற்றும் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை அவை பலவீனப்படுத்தாது. ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் பெரிய இலக்கிற்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும். காங்கிரஸின் வளர்ச்சி கூட்டணிக்கு அச்சுறுத்தல் அல்ல, அது கூட்டணியின் மொத்த வலிமையை அதிகரிக்கும் ஒரு அவசியம்" என்றும் மாணிக்கம் தாகூர் தனது பதிவில் கூறியுள்ளார்.