தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
தமிழக அரசு, முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்து யூடியூபர் மாரிதாஸ் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். குறிப்பாக, அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக அவர் வெளியிட்ட படம் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்றும், அமைச்சர்கள் ஆதவ் உள்ளிட்டோர் மீது அவர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் மாரிதாஸை கைது செய்தனர். இதனிடையே, யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், 'தவெகவின் “ரீல்ஸ் மாடல்” அரசின் ரியல் முகத்தை மக்களுக்கு விளக்கிக் கூறிய ஒரே காரணத்திற்காக சமூக ஊடகவியலாளர் மாரிதாஸை தடாலடியாக கைது செய்திருக்கும் முதல்வர் ஜோசப் விஜயின் அராஜகம் கடும் கண்டனத்திற்குரியது. பொதுமக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெறிப்பதில் தவெக அசுர வேகத்தில் செயல்படுவது வெட்கக்கேடானது. எனவே, கைது செய்யப்பட்ட திரு. மாரிதாஸ் அவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! கருத்து சுதந்திரத்தை அபகரிக்க தவெக அரசு முயல்வதை தமிழக பாஜ ஒருபோதும் அனுமதிக்காது!' என்று குறிப்பிட்டுள்ளார்.