சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய தலைவராக தமிழரான கராத்தே முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சமயப் பணிகளை ஆற்றிவரும் இந்த அமைப்பின் தேசியத் தலைவராக ஆர். முருகன் செல்வன், கராத்தே முருகன் என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர், பயிற்சியாளர், எழுத்தாளர், சிந்தனையாளர் மற்றும் தொழில் முனைவோராகவும் திகழ்கிறார்.
மும்பையைச் சேர்ந்த இவர், நேற்று (ஜூன் 7) நடைபெற்ற சிறப்பு தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தேசிய தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஓராண்டாக சமாஜத்தின் செயல் தலைவராகப் பணியாற்றிய அனுபவத்துடன், புதிய பொறுப்பை சிறப்பாக ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கராத்தே சாம்பியன்ஸ் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட இவர், விளையாட்டுத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
முன்னாள் தேசியத் தலைவர் எஸ். ஜே. ஆர். குமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. தேசிய செயற்குழுக் கூட்டத்தில், மூத்த அறங்காவலரும் அன்னதானக் குழுவின் தற்போதைய தலைவருமான டி. பி. சேகர், முருகன் செல்வனின் பெயரைப் பரிந்துரைத்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் எஸ். சேதுமாதவன், வி. கே. விஸ்வநாதன், ஏ. ஆர். மோகனன், தேசிய அமைப்புச் செயலாளர் ஈரோடு ராஜன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் முருகன் செல்வனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
'என் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி. 18-வது வயதை நிறைவு செய்யும் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். இந்த அமைப்பை விரிவுபடுத்தி, அதன் கட்டமைப்பையும் சேவைகளையும் வலுப்படுத்தி, ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைத்து சமூக நல்லிணக்கத்தின் அடிப்படையிலான சமூக மறுமலர்ச்சியை அடைய உறுதியுடன் செயல்படுவேன்' என முருகன் செல்வன் தெரிவித்தார். இவரது தலைமையில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சேவை, பக்தி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளைத் தொடர்ந்து செய்து வரும் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது.