தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குபவர்கள், அதன் முந்தைய பத்திரப்பதிவு விவரங்களை ஆய்வு செய்வது அவசியமாகும். இதற்காக, வில்லங்கச் சான்றிதழ் பெறப்படுகிறது. இதற்கு முன்பு, கட்டணம் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்து, வில்லங்கச் சான்றிதழ் பெற்று வந்தனர். பதிவுத்துறையின் இணையதளத்தில் இந்த வசதி பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 'ஸ்டார் 3.0' என்ற புதிய மென்பொருள் கடந்த ஜனவரி 22ஆம் தேதி பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனுடன், 'TNREGINET' என்ற பெயரில் புதிய மொபைல் செயலியும் தொடங்கப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இந்த செயலி பயன்பாட்டிற்கு வரவில்லை.
தற்போது, பதிவுத்துறை அதிகாரிகள் இந்தச் சிக்கல்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் விளைவாக, பதிவுத்துறையின் புதிய செயலி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் சொத்துக்கள் தொடர்பான வில்லங்க விவரங்களை எளிதாகப் பார்க்க முடியும் என்று பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 1975 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் தொடர்பான விவரங்களை, பொதுமக்கள் இந்த மொபைல் செயலி வழியாக அணுகலாம் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.