பொதுமக்களுக்கு ஒரு நற்செய்தி! இனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே பத்திரப்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் கடந்த மார்ச் மாதம் 'வருகை இல்லா ஆவணப்பதிவு' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான வழிகாட்டுதல்களையும் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய ஆவணப்பதிவு முறையின் மூலம், பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில், எங்கிருந்தும் இணையதளம் வழியாக தங்களது ஆவணங்களை எளிதாகப் பதிவு செய்துகொள்ள முடியும். ஆவணப் பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்தவுடன், அவரது மின்னணு கையொப்பத்துடன் ஆவணம் சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், ஆவணதாரர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
'வருகை இல்லா ஆவணப்பதிவு' (Anywhere Registration) நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ள நிலையில், சில குறிப்பிட்ட ஆவணங்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள், வங்கிக் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் போன்றவற்றை சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யலாம்.
பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தாளர்கள் மற்றும் வங்கிகள் பதிவுத்துறை இணையதளத்தில் உள்நுழைவை உருவாக்கி, ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கலாம். ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதி பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் அனைவரும் ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் ஆவணத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி மூலம் ஆதார் சரிபார்க்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7397574067, 9940446694, 6369798973, 8525805957 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.