கேரளாவில், போலீசாரின் சோதனையிலிருந்து தப்பிக்க கஞ்சாவை குக்கருக்குள் மறைத்து வைத்த நபர், குக்கர் விசில் அடித்தபோது வந்த வாசனையால் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னம்குளம் அருகே, பினீஷ் என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கல் தொடர்பாக போலீசார் சோதனை நடத்தினர். போலீஸ் வருவதை அறிந்த பினீஷ், சமையலில் இருந்த குக்கரில் கஞ்சா பாக்கெட்டை மறைத்து வைத்துள்ளார். கஞ்சாவை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய போலீசார், சாதம் வெந்ததும் குக்கரில் இருந்து வந்த வாசனையால் சந்தேகமடைந்து, குக்கரை திறந்து பார்த்தனர். அப்போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 401 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, பினீஷை கைது செய்தனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை ஒட்டி, ஜூன் 1 அன்று 'தூஃபான் நடவடிக்கை: போதைப்பொருள் வேட்டை' தொடங்கப்பட்டது. இந்த சிறப்பு நடவடிக்கையின் கீழ், ஆறு நாட்களில் மட்டும் போதைப்பொருள் வைத்திருந்த அல்லது கடத்திய குற்றத்திற்காக காவல்துறை 231 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மேலும், 241 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, 110 கிராம் எம்டிஎம்ஏ, 15.591 கிலோகிராம் கஞ்சா மற்றும் 149 கஞ்சா பீடிகள் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான காவல்துறையின் தீவிர நடவடிக்கையை காட்டுகிறது.