தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் புதிய திட்டம் ஒன்றை தவெக அரசு செயல்படுத்தியுள்ளது. இது மதுபான விற்பனையில் இருந்து கிடைக்கும் வருவாயை நேரடியாக அரசுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுவரை, ஹாட் பெட்டிகளுக்கு தலா 90 ரூபாய், பீர் பெட்டிகளுக்கு 40 ரூபாய், ஒயின் பெட்டிகளுக்கு 20 ரூபாய் என வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் அரசுக்கு வராமல் கமிஷனாக வேறு வழிகளில் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகளைக் கண்டறிந்து, அந்தத் தொகைகள் அனைத்தும் இனி நேரடியாக அரசுக்கே வந்து சேரும் வகையில் தமிழக அரசு அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது.
தமிழகத்தில் மாதந்தோறும் சுமார் 88 லட்சம் முதல் 90 லட்சம் மதுபான பெட்டிகள் விற்பனையாகின்றன. இதன் மூலம் மாதத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்தத் தொகைகள் அனைத்தும் இனி அரசுக்கு நேரடியாக வருவாய் ஈட்டித் தரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய திட்டத்தின் மூலம், தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 1200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசின் நிதி நிலையை வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.