டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை அணியிலிருந்து நீக்கியது மிகவும் கடினமான முடிவு என்று தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தேர்வுக்குழுவினர் நீண்ட ஆலோசனைகளை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சூர்யகுமாரின் சமீபத்திய பார்ம் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்ரேயஸ் ஐயரின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம், அடுத்த டி20 உலகக்கோப்பைக்கான அணியை உருவாக்குவதில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டனை நீக்குவது என்பது சுலபமான விஷயமல்ல. ஆனால், உலகக்கோப்பைக்குப் பிறகு எந்த சர்வதேசப் போட்டிகளும் நடக்காத சூழலில், அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தோம். சூர்யகுமார் தலைமையிலான அணியில் நிறைய மாற்றங்கள் இருந்தன, ஆனால் வருங்காலத்தைக் கணக்கில் கொள்ளும்போது ஸ்ரேயஸ் ஐயர் புதிய கேப்டனாக வருவது சரியான நகர்வு என்று நாங்கள் கருதுகிறோம், என்று அகர்கர் மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஐபிஎல் 2026 தொடரில் சூர்யகுமார் யாதவ் 13 இன்னிங்ஸ்களில் 270 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2017-ம் ஆண்டுக்குப் பிறகு, ஐபிஎல் தொடரில் அவரது மிகக் குறைந்த ரன் ஸ்கோர் இதுவாகும். அந்த சீசனில் அவரது சராசரி 20.76 ஆக இருந்தது. சூர்யகுமாரின் பார்ம் குறித்தான கேள்விகள் 2025-ம் ஆண்டிலேயே எழத் தொடங்கின. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வெறும் 28 ரன்களே எடுத்தவர், ஆசிய கோப்பையிலும் தடுமாறினார். இந்தியா கோப்பையை வென்றாலும், சூர்யகுமார் ரன் எடுக்கத் திணறினார்.
இருப்பினும், 2026 தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் தனது பார்மை மீட்டெடுத்தார். ஐந்து இன்னிங்ஸ்களில் மூன்று அரைசதங்களை விளாசி, 80.66 சராசரியுடன் சிறப்பாக ஆடினார். டி20 உலகக்கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிராக முக்கியமான ஆட்டத்தை வென்று கொடுத்தார். ஆனால், அதன் பிறகு எட்டு இன்னிங்ஸ்களில் அவரால் 35 ரன்களைக் கடக்க முடியவில்லை. இது அவரது பார்ம் குறித்த கவலைகளை மீண்டும் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தது. கேப்டனாக இருந்து உலகக்கோப்பை வென்ற வீரரிடம் இது போன்ற முடிவுகளைச் சொல்வது எளிதல்ல. அணியின் நலனை முன்னிறுத்தியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவர் செய்த பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு இந்த மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது, என்று தனது கருத்தை அவர் நிறைவு செய்தார்.