சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்ற போக்குவரத்துத் துறையின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த ஜனவரி 22, 2024 அன்று, மாநில போக்குவரத்துத் துறை ஆணையம், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றும், சென்னைக்குள் நுழையக் கூடாது என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்களும், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
முன்னதாக, போரூர், சூரப்பட்டு பகுதிகளில் பயணிகளை ஏற்றவும் இறக்கவும் ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி அளித்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் முனையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், பேருந்து முனையம் அமைக்க மாநில போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதல் கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் விண்ணப்பிக்க முடியாது என்றும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு தான் விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறினார். மேலும், குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்து இயக்க உரிமம் வழங்கிய நிலையில், அதைத் தடுக்க முடியாது என்றும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.