இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளே 16 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தின் பிட்ச் தரம் குறித்து இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உகந்த பிட்ச் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 40 ஓவர்களுக்குள் 140 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து வீரர் கைல் ஜாமிசன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியும், ராபின்சனின் அபார பந்துவீச்சால் நிலைகுலைந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 61 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, இங்கிலாந்தை விட 79 ரன்கள் பின்தங்கியுள்ளது. ராபின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
லார்ட்ஸ் மைதானத்தின் சீரற்ற பவுன்ஸ் குறித்து பேசிய மைக்கேல் வாகன், 'முதல் நாளிலேயே 16 விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது உண்மைதான். ஆனால் இது ஒரு நல்ல பிட்ச் கிடையாது. பந்து மிகவும் தாழ்வாகச் சென்று பேட்ஸ்மேன்களின் பேடில் படுவதைக் காண முடிந்தது. இது கவலைக்குரிய விஷயம்' என்று கூறினார். மேலும், 'லார்ட்ஸ் மைதானத்தின் இந்த ஸ்கொயரில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை எம்சிசி ஒப்புக்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் இதே பிட்ச் பிரச்சனை இருந்தது. அப்போது யாரும் பேசவில்லை, ஆனால் இது டெஸ்ட் போட்டிக்கு சிறந்த பிட்ச் அல்ல' என்றும் அவர் சாடினார்.
காயத்திலிருந்து மீண்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாடும் நியூசிலாந்து வீரர் கைல் ஜாமிசன் கூறுகையில், 'பொதுவாக டெஸ்ட் போட்டியின் 3-வது நாளைத்தான் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கும் நாள் என்பார்கள். ஆனால் இப்போட்டியில் முதல் நாளே அவ்வாறு அமைந்துவிட்டது. இன்னும் 79 ரன்கள் பின்தங்கியுள்ள நாங்கள், பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்று தெரிவித்தார்.