பிரபல கன்னட திரைப்பட நடிகையும், 'பிக்பாஸ்' பிரபலமுமான சுபா பூஞ்சா, தனது கணவர் சுமந்த் பில்லவாவிடம் இருந்து விவாகரத்து கோரி பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது திரையுலகிலும், ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுபா பூஞ்சாவுக்கும், உடுப்பியை சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் கன்னட செயற்பாட்டாளருமான சுமந்த் பில்லவாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி சுபாவின் சொந்த ஊரான மங்களூருவில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.
திருமணமாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இருவரும் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்து கோரி பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த நட்சத்திர தம்பதியினர், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பது திரை உலகிலும், ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.