இந்தியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க திமுக அழைப்பை நிராகரித்துள்ளது. ஜூன் 8 ஆம் தேதி டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறவிருந்த இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அழைப்பை திமுக நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு – ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்தையும் திமுக தொடக்கம் முதலே எதிர்த்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றங்களிலும் இது தொடர்பாக திமுக குரல் கொடுத்து வந்துள்ளது.
இந்தியா கூட்டணி தொடங்கியதிலிருந்து திமுக அதன் மையச் சக்தியாக இயங்கியுள்ளது. திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்துள்ளார் என்பதை கூட்டணியில் உள்ள கட்சிகளும் தலைவர்களும் அறிவார்கள். இருப்பினும், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு இழைத்த துரோகத்தால் மனக்காயமுற்ற கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், காங்கிரஸ் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளது.
இந்தியா கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில் திமுக என்றென்றும் குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. திமுகவின் இந்த நிலைப்பாடு காரணமாக, கூட்டணியிலிருந்து காங்கிரஸ் நீக்கப்படுமா அல்லது திமுக விலகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டணியில் நீடிக்கும் வரை, திமுகவும் இதன் கூட்டங்களில் பங்கேற்காது என்றே கருதப்படுகிறது.
