சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 66 வயது முதியவர், அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது மகனின் மனைவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் மருமகள் கர்ப்பமானார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதியவரின் மகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு, அவரது மருமகள் மாமனாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட முதியவர், தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
சில மாதங்களில் மருமகள் கர்ப்பமானதை அறிந்த முதியவர், 'இந்த விஷயத்தில் என்னை காட்டிக் கொடுத்து விடாதே' என கெஞ்சி உள்ளார். இதனால், மருமகள் தனது கர்ப்பத்தை அக்கம் பக்கத்தினரிடம் மறைத்து வந்துள்ளார். ஆனால், 7 மாத கர்ப்பமான நிலையில் வயிறு பெரிதானதால் குடும்பத்தினருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான், மாமனார் பாலியல் பலாத்காரம் செய்ததை மருமகள் வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, மருமகள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.