சென்னை: அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான 'ப்ளாஸ்ட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில் நடிகர் அர்ஜுன், தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிற்கு வருகை தந்த நடிகர் அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'முதல்வன்' படத்துடன் தற்போதைய ஆட்சியை ஒப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ரீல் முதல்வன். முதல்வர் விஜய் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அவர் நாட்டு மக்களுக்கு 100 சதவீதம் நல்லது செய்வார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதற்கு நாம் சிறிது காலம் அவகாசம் கொடுக்க வேண்டும்.
முதல்வரை சந்தித்தபோது, 'திரைத்துறையிலிருந்து மற்றொரு முதல்வர் வந்திருப்பது பெருமையாக உள்ளது. கடவுள் அவருக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்க வேண்டும். அவர் முன்னால் நிறைய பொறுப்புகள் உள்ளன' என்று தெரிவித்ததாக அர்ஜுன் கூறினார்.
'ப்ளாஸ்ட்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், நடிகர் அர்ஜுனின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளுக்கு நடிகர் அர்ஜுன் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.