நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க, பழக்கூடைகளுடன் சீர்வரிசையை எடுத்துக்கொண்டு சீமானின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தினார்.
கடந்த 22ஆம் தேதி சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டிற்கு, நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் ஒலிக்க, ஏராளமான பெண்களுடன் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஊர்வலமாக வருகை தந்தார். அவருடன் வந்த பெண்கள் பழக்கூடைகளுடன் சீர்வரிசைப் பொருட்களை சுமந்து வந்தனர்.
தன் வீட்டிற்கு சீர்வரிசைப் பொருட்களை எடுத்து வந்த அனிதா ராதாகிருஷ்ணனை, சீமான் வாசலுக்கு வந்து புன்னகையுடன் வரவேற்றார். பின்னர், மரியாதையின் நிமித்தமாக சீமானுக்கு பட்டு வேட்டியை அனிதா ராதாகிருஷ்ணன் அணிவித்தார். தொடர்ந்து, சீமான் அவரது கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அங்கு, குழந்தையுடன் இருந்த கயல்விழியை நலம் விசாரித்து, குழந்தைக்கும் தங்க நகை பரிசளித்தார்.
சீமான் – கயல்விழி குடும்பத்தினருடன் அனிதா ராதாகிருஷ்ணன் நீண்ட காலமாக நல்ல நட்புடன் இருந்து வருகிறார். இந்நிலையில், தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்ததை முன்னிட்டு, மாமன் முறையில் பிறந்த குழந்தைக்கு சீர்வரிசைப் பொருட்களை அவர் எடுத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.