தற்காலத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு குறைவான வாழ்க்கை முறை போன்றவற்றால் மலச்சிக்கலால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடலின் சீரான இயக்கத்திற்கு உடல் செயல்பாடு அவசியம். உடல் செயல்பாடு அதிகரிக்கும் போது இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஓட்டம் அதிகரித்து, சிறுகுடல் தசைகள் தூண்டப்பட்டு மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு காணப்படுகிறது. மலச்சிக்கலைத் தவிர்க்க வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய வழிமுறைகளை இங்கு காண்போம்.
மலச்சிக்கலால் ஒருவரின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன், உடல் நலமும் கெடும். இதற்குத் தீர்வு காண, தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். பெரிய அளவில் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்றாலும், தினமும் சிறிது நேரம் நடப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்ற எளிய செயல்கள் கூட மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.
மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது மிக முக்கியம். நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் குடல் சுவர்களில் உள்ள தசைகளைச் சுருங்கி விரியச் செய்து, செரிமானத்தை எளிதாக்குகின்றன. இதனால், செரிக்கப்பட்ட உணவு எளிதாக நகர்ந்து மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுகிறது. எனவே, அதிக காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் வகைகள், முழு தானியங்கள் மற்றும் கொட்டை வகைகள் (நட்ஸ்) போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது மலச்சிக்கலைப் போக்க உதவும். இருப்பினும், நார்ச்சத்துள்ள உணவுகளை அளவோடு உட்கொள்வது அவசியம்.
மேலும், போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பதும் மலச்சிக்கலுக்கு ஒரு முக்கியக் காரணமாகும். உடலின் பல செயல்பாடுகள் சீராக நடைபெற நீர்ச்சத்து இன்றியமையாதது. போதுமான அளவு தண்ணீர் குடலில் சேரும்போது மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. சிறிதளவு நீர்ச்சத்து குறைந்தாலும் மலச்சிக்கல் ஏற்படலாம். எனவே, மலச்சிக்கலைத் தவிர்க்க தினமும் 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது நல்லது.