உலகளவில் சுமார் 8 முதல் 10 சதவீதம் பேர் சிறுநீரக பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சிறுநீரகத்தில் கல் தோன்றுவதாகும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீண்ட நாள் சர்க்கரை நோயும் சிறுநீரக பாதிப்புகளுக்கு வழிவகுக்கின்றன. சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
பொதுவாக, நாம் அருந்தும் திரவங்கள் உடலில் உள்ள அதிகப்படியான தாது உப்புகளை வெளியேற்ற உதவுகின்றன. போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், இந்த தாது உப்புகள் சிறுநீரகத்தில் தங்கி, கற்களாக உருவாக வாய்ப்புள்ளது. எனவே, சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அல்லது பிற திரவ பானங்களை அருந்துவது அவசியம்.
உணவில் சோடியம் உப்பை அதிகமாகச் சேர்ப்பதும் சிறுநீரகக் கல் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. சிறுநீரில் சோடியம் அளவு அதிகமாகும்போது, அது சிறுநீரில் உள்ள சுண்ணாம்புச் சத்து மீண்டும் இரத்தத்திற்குள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இதனால், சிறுநீரில் சுண்ணாம்புச் சத்தின் அளவு அதிகரித்து, சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன.
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க, உணவில் உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைத்து, அதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது. இறைச்சி உண்பதால் உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது. அதிக யூரிக் அமிலம், கால்சியம் ஆக்ஸலேட்டுடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது. எனவே, இறைச்சி மற்றும் பால் பொருட்களை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், பசலைக்கீரை போன்ற கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வது சிறுநீரகக் கல் தோன்றும் வாய்ப்பைக் குறைக்கும். நாம் உண்ணும் உணவில் போதுமான அளவு சுண்ணாம்புச் சத்து மற்றும் ஆக்ஸலேட் இருந்தால், அவை சிறுகுடலில் ஒன்றிணைந்து சிறுநீரகக் கல் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கும்.