தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், முதல்வர் விஜய் அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் படைக்கு 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' என்ற பெயரை ஐ.ஜி. பவானீஸ்வரியே பரிந்துரைத்துள்ளார். முதல்-அமைச்சர் விஜய் அவரது பரிந்துரையை ஏற்று இந்தப் பெயரைச் சூட்டியதோடு, பவானீஸ்வரியை ஐ.ஜி.யாகவும் நியமித்துள்ளார்.
இந்தப் படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் இடம்பெறுவார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, உடனடி நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்தப் பெண் காவலர்களை மட்டுமே கொண்ட சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' பிரிவினருக்கான பிரத்யேக புதிய சீருடை விவரங்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த நவீன சீருடை, பெண் காவலர்களின் பணிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய சீருடையின் வண்ண விவரங்கள்: சட்டையானது நேவி ப்ளூ (அடர் நீலம்) நிறத்தில் அரைக்கைச் சட்டையாகவும், பேண்ட் பாரம்பரிய காக்கி நிறத்திலும் இருக்கும். மேலும், கருப்பு நிறத் தொப்பி, கருப்பு நிற வெப் பெல்ட், பிரத்யேக 'சிங்கப்பெண்' லோகோ மற்றும் கருப்பு நிறக் காலணிகள் ஆகியவை இந்த சீருடையின் மற்ற அம்சங்களாகும்.