சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சர்வதேச தரத்திலான நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரைத் திட்டத்தின் கீழ், தலா 20 ஏக்கர் பரப்பளவில் மூங்கிலால் ஆன நிழற்குடைகள், சாய்வு நாற்காலிகள், அமரும் நாற்காலிகள், கண்காணிப்புக் கோபுரங்கள், குப்பைத் தொட்டிகள், முகப்பு வளைவு, தியான மையம், வாசிக்கும் அறை மற்றும் தன்படம் எடுக்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், தென்னை மரங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, காட்சிப் பதிவு கண்காணிப்பு, முதலுதவி அறை, இருப்பு அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான கழிப்பறை, தானியங்கி இயந்திரம் மூலம் தூய்மையான குடிநீர் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வின்போது, ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் நலன் கருதி, குப்பைகள் சேகரிக்கும் பணியை நாள்தோறும் சுழற்சி முறையில் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் பயன்படுத்தும் இலவசக் கழிப்பிடங்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் நடைபாதைகளையும் தினந்தோறும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், விவேகானந்தர் இல்லம் எதிரில் முடிவுறும் நிலையில் உள்ள நீலக்கொடி கடற்கரை திட்டம்-3, கலங்கரை விளக்கம் பின்பகுதியில் நடைபெற்று வரும் நீலக்கொடி கடற்கரைத் திட்டம்-4, அண்ணா சதுக்கம் அருகில் தொடங்கப்பட்டுள்ள நீலக்கொடி கடற்கரைத் திட்டம்-5 ஆகிய பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
இதனிடையே, ஆணையாளர் சென்னை மெரினா நீச்சல் குளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படுகிறது. கோடை காலம் என்பதால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இங்கு வந்து பயன்பெற்று வருகின்றனர். நீச்சல் குளத்தின் தண்ணீர், குளம், கழிவறை, உடை மாற்றும் அறைகள் ஆகியவற்றை தினந்தோறும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என ஆணையாளர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் திரு.பானுகுமார் மற்றும் பிற அலுவலர்கள் உடனிருந்தனர்.