கோவை: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலுக்காக, காதலனுடன் செல்வதாக கடிதம் எழுதிவிட்டு மாயமான 16 வயது மாணவியை போலீசார் மீட்டனர். செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில், போலீசார் மாணவியின் எண்ணை டிரேஸ் செய்து அவரை பத்திரமாக மீட்டனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை முடித்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மாணவிக்கு செல்போன் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்ததால், அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, காதலனுடன் செல்வதாக கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மாணவி எழுதிய கடிதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் மாணவி கிடைக்காததோடு, அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையில், மாணவி தனது காதலனைப் பார்ப்பதற்காக பேருந்தில் சென்றுள்ளார். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே பேருந்து பழுதானதால், பயணிகள் வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது தனது முடிவை மாற்றிக்கொண்ட மாணவி, கோவைக்கு திரும்பியுள்ளார். மாணவியின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் தேடியபோது, அவர் கோவைக்கு வந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு விரைந்த போலீசார், மாணவியை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.