ஒவ்வொரு மாதமும் இறுதியில் நடைபெறும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம், இந்த மாதம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. மக்களின் கோரிக்கைகள், பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்வு காணும் இந்த கூட்டத்தில், பல்வேறு திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
மாதத்தின் தொடக்கத்தில் வார்டு வாரியாக நடைபெறும் வார்டு குழு கூட்டங்களில் மக்களின் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, அவை மன்றக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மன்றக் கூட்டத்திற்குப் பிறகு, சட்டமன்றத் தேர்தல் பணிகளால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், கடந்த இரண்டு மாதங்களாக மாநகராட்சி மன்றக் கூட்டம் நடைபெறவில்லை.
இந்த மாதம் 7-ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, வார்டு கமிட்டி கூட்டங்கள் நடைபெறும் என கவுன்சிலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கான அறிவிப்புகள் முறையாக வழங்கப்படாததால் வார்டு கமிட்டி கூட்டங்கள் நடைபெறவில்லை. இதனால், மாதந்தோறும் நடைபெறும் மாநகராட்சி மன்றக் கூட்டமும் இந்த மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வார்டு குழு கூட்டங்கள் நடைபெறாத நிலையில், மன்றக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டிருப்பது, மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படுமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் கூட்டங்கள் நடைபெற்று, மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.