சோனாக்சி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் நடிப்பில் அஸ்வினி திவாரி இயக்கியுள்ள 'சிஸ்டம்' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மே 22 அன்று வெளியானது. இந்தப் படத்தில் ஜோதிகா ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்த நீதிமன்ற சுருக்கெழுத்தாளராக நடித்துள்ளார். சோனாக்சி சின்ஹா வசதி படைத்த அரசு வழக்கறிஞராக நடித்துள்ளார். சமூக அந்தஸ்தில் முற்றிலும் வேறுபட்ட இந்த இரு பெண்களும், புதைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர எப்படி கைகோர்க்கிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு.
'ஜோதிகாவிடம் எப்போது மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிப்பீர்கள்' என்ற கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, 'நான் சரியான கதைகள் வருவதற்காக காத்திருக்கிறேன். அழுத்தமான வேடங்கள் உள்ள படங்கள் பல நடித்திருக்கிறேன். அரசுப் பள்ளி ஆசிரியை முதல் வழக்குரைஞர் வரை பெண் மைய பாத்திரங்கள் செய்யக்கூடிய எல்லா வேடங்களிலும் நடித்துவிட்டேன். குடும்பத் தலைவியாகவும் பல விதங்களில் நடித்துவிட்டேன். நான் இப்போது புதுமையான, வித்தியாசமான ஒன்றைத் தேடுகிறேன். அதற்காக 2 வருடங்கள்கூடக் காத்திருக்க நான் தயார்' என்று தெரிவித்தார்.
மம்முட்டியுடன் நடித்த மலையாளப் படத்தின் கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் குறிப்பிட்ட ஜோதிகா, அது அமைதியான அதேநேரத்தில் வலுவான பாத்திரமாக இருந்ததாகக் கூறினார். இதுபோன்று வித்தியாசமான வேடங்களை தான் தேடுவதாகவும், இல்லையெனில் அது பார்வையாளர்களுக்கும் சலிப்பைத் தரக்கூடியதாக இருந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார். 30 வருடங்களாக தன்னை பார்த்து வரும் பார்வையாளர்கள், ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப செய்வதை விரும்பவில்லை என்றும், வேறுவிதமான ரோல்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போதுள்ள பார்வையாளர்கள் பல மொழிப் படங்களையும் பார்ப்பதால், தனது நடிப்பிலும் அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக ஜோதிகா தெரிவித்தார். இதுபோன்ற வேடங்களைத் தேர்ந்தெடுப்பதில் சூர்யா மிகுந்த ஆதரவாக இருப்பதாகவும், ஆனால் தென்னிந்திய சினிமாவில் அப்படியான வேடங்களை யாரும் எழுதுவதில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். பெண்ணின் பல்வேறு பரிணாமங்களைப் பிரதிபலிக்கும் வேடங்களில் நடிக்க விருப்பம் என்றும், அது தமிழ்ப் படமாக இருந்தாலும் சரி, இந்தி அல்லது குஜராத்தி படமாக இருந்தாலும் சரி, அந்த வேடம் பிடித்தால் நடிப்பேன் என்றும் அவர் கூறினார். ஒரே விஷயத்தை மீண்டும் செய்யவோ, ஒரே முகபாவங்களை மட்டுமே நடிக்க விருப்பமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
