நாட்டில் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்களை ஆராய்வதற்காக மத்திய அரசு ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நாவ்லேகர் இந்த குழுவின் தலைவராக செயல்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் இயல்புக்கு மாறான மக்கள் தொகை மாற்றங்கள் ஒரு நாட்டின் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் கடுமையான சவாலாக அமைகின்றன. இந்த சவாலை எதிர்கொள்ள, மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து ஆராய ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பிற்கு இணங்க, மத்திய அரசு தற்போது குழுவை அமைத்துள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நாவ்லேகர் தலைவராகவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருடன் இணைந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி துர்கா சங்கர் மிஸ்ரா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி ஸ்ரீவஸ்தவா, டாக்டர் ஷமிகா ரவி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இடம் பெறுவர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (வெளிநாட்டினர்-1) உறுப்பினர் செயலாளராக பணியாற்றுவார்.
மக்கள் தொகை மாற்றம் என்பது நாட்டின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, சமூக கட்டமைப்பு மற்றும் பழங்குடியின சமூகத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு தீவிரமான பிரச்சினை என்று அமித் ஷா வலியுறுத்தினார். சட்டவிரோத குடியேற்றம் மற்றும் இயல்புக்கு மாறான காரணங்களால் நாடு முழுவதும் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து இக்குழு விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளும். மேலும், மத மற்றும் சமூக மட்டத்தில் நிகழும் அசாதாரண மக்கள் தொகை மாற்றங்களின் போக்குகளைப் பகுப்பாய்வு செய்து, இதற்கான திட்டமிடப்பட்ட தீர்வை முன்வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.