இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சிக்கிம் மாநிலத்திற்குச் சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது இந்திய-சீன எல்லைப் பகுதிக்குச் செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இன்று மதியம் சுமார் 12 மணியளவில் கேங்டாக் லிபிங் ஹெலிபேடில் வந்திறங்கிய குடியரசுத் தலைவரை, சிக்கிம் மாநில கவர்னர் ஓம் பிரகாஷ் மாத்தூர் மற்றும் முதல் மந்திரி பிரேம் சிங் தமாங் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், தனது தங்குமிடமான 'லோக் பவன்' ஜனாதிபதி மாளிகைக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.
முதல் நாள் நிகழ்ச்சியாக, கேங்டாக்கில் உள்ள ரிட்ஜ் பூங்காவில் பெண்களுக்கான 'பிங்க் சிட்டி ரன்னர்ஸ்' வாகன சேவையை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மேலும், மலர்த்தோட்டம் மற்றும் திபெத்தியல் நிறுவனத்திற்கும் செல்ல உள்ளார். இரண்டாம் நாள், இந்திய-சீன எல்லையில் உள்ள நாது லா கணவாய் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிடுகிறார். தொடர்ந்து, கேங்டாக்கில் உள்ள மனன் பவனில் நடைபெறும் சிக்கிம் பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
பயணத்தின் இறுதி நாளான மே 28 அன்று, பால்ஜோர் மைதானத்தில் நடைபெறும் விழாவில் சிக்கிம் காவல்துறைக்கு ஜனாதிபதி 'காவல்துறை வண்ண விருது' வழங்கிச் சிறப்பிக்கிறார். மேலும், அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு மாநில அரசு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.