பெரம்பலூர் அருகே குன்னம் பகுதியில் திமுக மற்றும் விசிக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, திமுக எம்.பி ஆ.ராசா தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குன்னம் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்குச் சென்ற திமுகவினரை, குன்னம் பேருந்து நிலையம் அருகே விசிக கட்சியினர் வழிமறித்துத் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்குக் காரணம், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, விசிகவை விமர்சனம் செய்ததுதான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து திமுக எம்.பி ஆ.ராசா தனது எக்ஸ் தள பக்கத்தில், 'ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண். கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்துக்கு முரண் மட்டுமல்ல; மூடத்தனம். 'வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்' என்ற கலைஞரின் முழக்கத்தை இதயத்தில் ஏந்துவோம்!' என்று பதிவிட்டுள்ளார்.
வன்முறையைத் தவிர்த்து, வறுமையை வெல்வோம் என்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முழக்கத்தை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும், கருத்து மோதல்களே ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் என்றும், உடல் ரீதியான மோதல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்றும் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.