மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, கடந்த மே 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் நடைபெற்றது.
சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி ஏந்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். குறிப்பாக, குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்த பக்தர்கள், பிறந்த குழந்தையை கரும்புத் தொட்டிலில் கட்டி, நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் நான்கு ரத வீதிகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
திருவிழாவை முன்னிட்டு, சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும் நீர்-மோர் பந்தல்களை அமைத்து, பொதுமக்களுக்கு குளுமையான நீர் மற்றும் மோர் வழங்கி வருகின்றனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
நாளை, மந்தை களத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருக்கும் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். வரும் ஜூன் 2ஆம் தேதி தேரோட்டமும், 3ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறும். கோயில் செயல் அலுவலர் ராஜா தலைமையில் பணியாளர்கள், அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் சிறப்பு பூஜைகள் என திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ளன.