கேரள நடிகர் சங்கமான 'அம்மா'வின் தலைவராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்நிலையில், ஒரு பெண் தலைமைப் பொறுப்பில் இருப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ஸ்வேதா மேனன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது குறித்து ஸ்வேதா மேனன் கூறுகையில், 'சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் என்னை பதவியிலிருந்து விலகக் கூறினால், நான் எனது பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், நான் இங்கு தோற்பதற்காக வரவில்லை. செயற்குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் திட்டமிட்டு என்னை குறிவைத்து தனிமைப்படுத்த முயல்கிறார்கள். இந்த அமைப்பில் ஒரு பெண் தலைமைப் பொறுப்பில் இருப்பதை ஏற்றுக்கொள்ள சிலர் இன்னும் தயங்குகிறார்கள்' என்று தெரிவித்தார்.
மேலும், 'அன்சிபா மற்றும் டினி டாம் இடையேயான சர்ச்சை விவகாரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போல் தெரிகிறது. ஊடகச் செய்திகள் மூலமாகவே எனக்கு இதுகுறித்த புகார் முதலில் தெரியவந்தது. அன்றைய தினம் மதியம் 2 மணியளவில்தான் அம்மா' சங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாகப் புகார் வந்தது. இது குறித்துப் பேச அன்சிபாவைத் தொடர்பு கொள்ள முயன்றோம், ஆனால் அவர் எங்கள் அழைப்பை ஏற்கவில்லை. சங்கத்தின் விதிமுறைகளின்படி இந்த விவகாரம் முறையாக விசாரிக்கப்படும்' என்றும் ஸ்வேதா மேனன் விளக்கினார்.
