மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா இன்று அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் பண்டர் அபாஸ் நகரில் உள்ள ஏவுகணை ஏவுதளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியிலும் ஈரான் கடற்படைக்கு சொந்தமான படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தொடர் தாக்குதல்களால் பலர் உயிரிழந்தனர். மேலும், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியதால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா ஏப்ரல் 7ம் தேதி அறிவித்தது. இதற்கிடையே, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. ஈரான் அணு ஆயுத தயாரிப்பு முயற்சியைக் கைவிட வேண்டும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கோரியது. அதேபோல், ஈரான் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், தாக்குதலை நிறுத்த வேண்டும், ஹர்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதை அங்கீகரிக்க வேண்டும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்தது.
தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று நடத்தியுள்ள இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்காப்பு நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டாலும், இதில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் நிலவுகிறது. ஈரான் இதற்கு பதிலடி கொடுக்குமா அல்லது பேச்சுவார்த்தையில் விரிசல் ஏற்பட்டு போர் மீண்டும் தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.