கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து விவசாய சங்கங்கள் மற்றும் பாமக தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.
பாமக தலைவர் அன்புமணி கூறுகையில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது முழுமையாக பயனளிக்காது என்றாலும், விவசாயிகளுக்கு ஓரளவாவது பயனளிக்கக்கூடிய இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன், தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்பவருக்கு 100 சதவீதமும், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருப்பவருக்கு 50 சதவீதமும் கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போதைய அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றும் வகையில் உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சிறு, குறு விவசாயிகள் இரண்டரை ஏக்கர் கடன் பெற்றிருந்தாலே ரூ.91,250 வருகிறது. இதை முழுவதுமாக தள்ளுபடி செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவு கடனில் இருந்து மீள முடியும் என்றும், முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், தமிழக அரசின் அறிவிப்பு தேர்தல் கால வாக்குறுதிக்கு முரணாக உள்ளதாகக் கூறியுள்ளார். வேளாண் உற்பத்தி செலவுகள் உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு கட்டுப்படியான ஆதார விலையை அறிவிக்காததால் விவசாயிகள் கடனாளிகளாக மாறியுள்ளனர். எனவே, 5 ஏக்கருக்குட்பட்ட விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிர் கடனில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், இந்த அறிவிப்புகள் கடன் சுமையில் இருக்கும் விவசாயிகளை காப்பாற்ற உதவாது எனத் தெரிவித்துள்ளார். மாநில அரசுகள் தனது நிதியில் இருந்து செயல்படுத்தும் நலத்திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்பதை முதல்வர் உணர வேண்டும் என்றும், கடந்த காலங்களை பின்பற்றி கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நடப்பாண்டுக்கான புதிய கடன் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தி, நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொண்டு கடன் தள்ளுபடி நடவடிக்கையை தொடர வேண்டும் என்றும், தற்போதைய அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர்க் கடன் தள்ளுபடி என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
