உலகம் முழுவதும் எபோலா வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டுள்ளது.
காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சிறப்பு குழுக்களை அமைத்து, வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
காய்ச்சல், சோர்வு, தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காரணமின்றி ரத்தப்போக்கு, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டில் 21 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலா அறிகுறிகளுடன் வருவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா பரவலின்போது தனிமைப்படுத்தல் வார்டாக செயல்பட்ட, திருச்சி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள தனி கட்டிடத்தில், ஆண் மற்றும் பெண்களுக்கு தலா 5 படுக்கைகள் என மொத்தம் 10 படுக்கைகளுடன் இந்த சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு தயார் நிலையில் உள்ளதாகவும், 24 மணி நேர கண்காணிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.