ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 18 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தற்போது சாம்பியனாக உருவெடுத்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பட்டம் வென்ற அந்த அணி, நடப்பு 2026-ம் ஆண்டிலும் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.
நட்சத்திர வீரர்கள் இருந்தும் பல ஆண்டுகளாக சறுக்கி வந்த பெங்களூரு அணியின் இந்த அபார வளர்ச்சிக்கு தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடி மாற்றங்களே முக்கிய காரணம் என பார்க்கப்படுகிறது. ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனான ஆன்டி பிளவர், சர்வதேச டி20 தொடர்களில் அணிகளை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற அனுபவம் கொண்டவர். இவர், தனிநபர் ஆட்டத்தை விட கூட்டு முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, வீரர்களுக்கான பொறுப்புகளை துல்லியமாக வகுத்து, தரவுகளின் அடிப்படையில் வியூகங்களை அமைத்தார்.
ஆன்டி பிளவரின் வழிகாட்டுதலால் 2025-ம் ஆண்டு சீசனில் ரஜத் படிதார் தலைமையில் பெங்களூரு அணி அபாரமாக விளையாடி, லீக் சுற்றில் 2-வது இடத்தைப் பிடித்ததுடன், இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக மகுடம் சூடியது. இதற்கு பக்கபலமாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார். 2024 சீசனுக்குப் பிறகு ஓய்வு பெற்ற இவர், பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் பொறுப்பை ஏற்று, இந்திய ஆடுகளங்களின் தன்மை மற்றும் வீரர்களின் மனநிலை குறித்து நன்கு அறிந்திருந்ததால், பேட்டர்களுக்கு பெரும் ஊக்கமளித்தார்.
குறிப்பாக நெருக்கடியான நேரங்களில் நிதானத்தை இழக்காமல் விளையாடுவது குறித்து அவர் அளித்த ஆலோசனைகள் கைகொடுத்தன. இவரது பயிற்சியால் குருணால் பாண்டியா போன்ற வீரர்கள் இக்கட்டான சூழலிலும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டமும், களத்தில் காட்டும் ஈடுபாடும் மற்ற வீரர்களுக்கு உற்சாகம் அளித்தது. ஆன்டி பிளவர் – கார்த்திக் கூட்டணியின் முறையான திட்டமிடல் மற்றும் கோலியின் அனுபவம் ஆகியவை இணைந்து பெங்களூரு அணியை வெற்றிகரமாக மாற்றியுள்ளது. 2026 சீசனிலும் அதே உத்வேகத்துடன் விளையாடி வரும் பெங்களூரு அணி, மீண்டும் கோப்பையை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. இந்த ஆண்டு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.