புதுடெல்லியில் இருந்து அகில இந்திய வானொலி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மே 25-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் பத்ம விருதுகளை வழங்க உள்ளார். இதையொட்டி, பத்ம விருது பெற்றவர்களின் சாதனைகள் குறித்த சிறப்பு தொடர் 'பீப்பிள்ஸ் பத்மா ஆன் ஆகாஷ்வாணி' என்ற பெயரில் இன்று முதல் (மே 24) ஒலிபரப்பாகிறது.
இந்த சிறப்பு தொடரில், விருது பெற்றவர்களின் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் அவர்கள் ஆற்றியுள்ள மகத்தான சாதனைகள் பற்றிய பல்வேறு தகவல்கள் இடம்பெறும். மேலும், மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணி முதல் 100.1 அலைவரிசையில் 'ஆகாஷ்வாணி கோல்ட்' என்ற தலைப்பிலும் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.
பொதுமக்கள் இந்த தொடரை நியூஸ் ஆன் ஏர் என்ற செல்போன் செயலி மூலமாகவும், நியூஸ் ஆன் ஏர் என்ற யூடியூப் சேனல் மூலமாகவும் கண்டுகளிக்கலாம். பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, அதிகம் பிரபலமடையாத சாதனையாளர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அத்தகைய சாதனையாளர்களைப் பற்றிய தகவல்களை பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்த சிறப்பு தொடர் தயாரிக்கப்பட்டு, தற்போது ஒலிபரப்பப்படுகிறது. இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் விரிவாகக் கூறினார்.