தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. பகல் நேரங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகும் வெப்பத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில், இரவில் மின்சாரம் தடைபடுவது தூக்கத்தையும் கெடுத்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையைத் தவிர தமிழகத்தின் பல பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் ஏற்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த மின்வெட்டுகளுக்கான காரணங்கள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) விளக்கம் அளித்துள்ளது.
மின்வாரியத்தின் விளக்கத்தின்படி, உச்ச நேரங்களில் (peak hours) உள்ளூர் மின் தேவை அதிகரிப்பதால் ஏற்படும் 'ஃப்யூஸ் ஆஃப் கால்கள்' (Fuse off Calls) மின்வெட்டுக்கு முக்கிய காரணம். மேலும், நிலத்தடி மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகள், ஜம்பர் கட், மின் கம்பிகள் துண்டிக்கப்படுதல் போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளாலும் மின்வெட்டு ஏற்படுகிறது. இவற்றை விரைவாக சரிசெய்ய சிறப்பு மொபைல் பராமரிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மழை, காற்று, இடி போன்ற வானிலை மாற்றங்களாலும் தற்காலிக மின் தடைகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக நுகர்வோர் சுமை மற்றும் நகர வளர்ச்சி காரணமாகவும் சில பகுதிகளில் மீண்டும் மீண்டும் மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, உயர்திறன் மின்மாற்றிகள் அமைத்தல், புதிய துணை மின்நிலையங்கள் நிறுவுதல் போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், மின்தடைகளை விரைவாக சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக தற்காலிகப் பணியாளர்களும் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.