கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு நீதி கேட்டு கோவை மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், 'இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். மேலும், இக்கட்டான நேரத்தில் சிறுமியின் பெற்றோர்களுக்கு திமுக துணையாக நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 12 நாட்களில் மட்டும், பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் மற்றும் தற்போது கோவை சிறுமி கொலை என 30க்கும் மேற்பட்ட பெரிய சம்பவங்கள் செய்திகளில் வந்துள்ளன. இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, முதலமைச்சர் சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.