தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவதால், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மறுநாள் பணிகளுக்கு செல்வோர், மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்ற நிச்சயமற்ற நிலையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்வாரிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டால், அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது மக்களின் பொறுமையை சோதிப்பதாக அமைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெரம்பூர், ராயபுரம், அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளிலும், நேற்று கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளிலும் நீண்ட நேரம் மின்வெட்டு நீடித்தது.
குறிப்பாக, கொளத்தூர் பகுதியில் 4 மணி நேரமாக நீடித்த மின்வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல பல்வேறு இடங்களிலும் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மின்வெட்டால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், இது நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் காட்டுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இரவு நேரங்களில் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரிப்பதாலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இரவுப் பணி காரணமாகவும் மின் தேவை அதிகரிக்கிறது. இதனால், மின் மாற்றிகள் மற்றும் வளைய சுற்று அமைப்புகளில் உள்ள டிரிப்பர்கள் செயல்பட்டு மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து புகார் கிடைத்தால், அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது' என்று விளக்கமளித்தனர். இருப்பினும், மக்களின் தொடர் புகார்களுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது.